மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
10-Sep-2025
விருதுநகர்:''பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தது உண்மை. இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் உள்ளனர். விரைவில் நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார்'' என விருதுநகரில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஆளும்கட்சி மீது மக்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. மக்கள் முதல்வரோடு இருக்கின்றனர், முதல்வர் மக்களோடு இருக்கிறார். இதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் செப். 20ல் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். கரூரில் முப்பெரும் விழா நடத்துகிறோம். மகளிர் உரிமைத்தொகை 1.15 கோடி பேருக்கு வழங்குகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அதிகமாக வரும் மகளிர் உரிமைத்தொகை மனுக்களை சென்னைக்கு அனுப்பி சரிபார்க்கும் பணிகள் நடக்கிறது. தகுதி இருக்கும் அனைவருக்கும் வழங்கப்படும். ஆளும் கட்சியை பாராட்டி விட்டால் எதிர்க்கட்சிக்கு வேலை இல்லாமல் போய்விடும். தேர்தல் நேரத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தது உண்மை. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் போதிய நிதி இல்லை என்பது தெரிந்தது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., நிதி இல்லாமல் வைத்து விட்டு சென்றது. தற்போது அரசு ஊழியர்களுக்கு சம்பளம், திட்டங்கள், கடனிற்கான வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மட்டுமே பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர முடியவில்லை. இத்திட்டத்தை கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் அரசு ஊழியர் சங்கத்தினரும் இருப்பதால் விரைவில் நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார். த.வெ.க., தலைவர் விஜய் இப்போது தான் தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ளார். அடுத்த தேர்தலில் பிரசாரத்திற்கு வரும் போது இருக்கும் கூட்டத்தை பார்ப்போம். மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு எந்த தடையும் அரசு விதிப்பதில்லை, என்றார்.
10-Sep-2025