பிரச்னையும் தீர்வும்
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் தண்ணீர் செல்லும் ஓடைகள், கால்வாய்கள் துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி விடுகிறது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் ரோட்டில் ஓடி சிரமத்தை ஏற்படுகிறது. நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர வில்லை. எனவே ஓடை, கால்வாய்களை துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி மாநகராட்சியில் சிறுகுளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய கண்மாயிகள், பொத்தமரத்து ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளுக்கு செல்கின்ற ஓடைகள், வரத்து கால்வாய்கள், வாறுகால்கள் பெரும்பான்மையானவை துார்வாரப்படாமல் மண் மேவி கிடப்பதால் மழை நீர் ஓடி வர வாய்ப்பு இல்லை. நகருக்குள் கிருதுமால் ஓடை இரண்டு கிலோமீட்டர் நீளத்தில் செல்கின்றது. சிறுகுளம் கண்மாயிலிருந்து காமராஜர் சிலை, முஸ்லிம் ஓடைத்தெரு, மருது பாண்டியர் தெரு, அம்பேத்கர் மணி மண்டபம், டாக்ஸி ஸ்டாண்டு காந்தி ரோடு வழியாக நகரை விட்டு வெளியேறி மீனம்பட்டி கன்மாய்க்கு செல்கிறது. அங்கிருந்து அர்ஜுனா நதியில் கலக்கும். மருத நாடார் ஊருணியில் இருந்து வரும் கால்வாய் அம்மன் கோவில்பட்டி வழியாக சென்று பொத்து மரத்து ஊருணியில் கலக்கிறது. இதேபோல் நாரணாபுரம் ரோட்டில் இருந்து வரும் ஒரே கிருதுமால் ஓடையில் இணைகின்றது. எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி அருகில் இருந்து செல்லும் ஓடை காரனேஷன் காலனி, நேஷனல் காலனி, தீயணைப்பு நிலையம் மருது பாண்டியர் தெரு வழியாக கிருதுமால் ஓடையில் இணைகிறது. மேலும் அய்யனார் காலனி, சசி நகர் வழியாக அண்ணாமலை நாடார் உண்ணாலையம்மாள் பள்ளி பின்புறம் உள்ள கால்வாய் வழியாக சென்று விஸ்வநத்தம் ரோடு வழியாக கிருதுமால் ஓடையில் கலக்கிறது. இந்த ஓடைகள் அனைத்துமே 15 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு துார்வாரப்பட்டது. ஓடையில் சிறுவர்கள் விளையாடும் அளவிற்கு இடம் இருந்தது. மழைக் காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி வெளியேறி கண்மாய், ஊருணில் சேர்ந்தது. ஆனால் தற்போது ஒரு சில இடங்களில் ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. இதில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்த ஓடை இருக்கின்ற பகுதிகளை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது .மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழி இல்லாமல் ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி சாக்கடையாக மாறி ரோடு குடியிருப்பு பகுதிகளில் ஓடுகிறது. அவ்வப்போது ஓடைகள், வாறுகால்கள் துார்வாரப்பட்டாலும் நிரந்தர தீர்வாக முழுமையாக துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆத்தீஸ்வரன், தொழிலதிபர்: பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஓடைகளுமே முழுமையாக துார்வாரப்பட்ட நிலையில் பின்னர் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் பெரும்பான்மையான ஓடைகளில் கோரைப்புற்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் நீர்நிலைகளுக்கு செல்ல வழி இல்லை.சிவ செல்வராஜ், தொழிலதிபர்: ஓடைகள், கால்வாய்கள் அவ்வப்போது துார்வாரப்பட்டாலும் முழுமையாக பணிகள் நடக்கவில்லை. தண்ணீர் வெளியேறுவதற்கு நிரந்தர தீர்வாக முழுமையாக துார்வார வேண்டும். அதே சமயத்தில் மீண்டும் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பையை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.தீர்வு: சிவகாசியில் சிறுகுளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய கண்மாய்கள், பொத்தமரத்து ஊருணி போன்றவைகளுக்கு நீர் செல்கின்ற ஓடைகள், வரத்து கால்வாய்கள், வாறுகால்கள் பெரும்பான்மையானவை துார்வாரப்படாமல் மண் ஏவி கிடப்பதால் மழை நீர் ஓடி வர வாய்ப்பு இல்லை. இதனால் தற்போதும் இந்த நீர் நிலைகளில் தண்ணீர் முழுமையாக நிரம்பவில்லை. சமீபத்தில் கோடை மழை பெய்து பலன் இல்லாமல் போய்விட்டது. எனது அனைத்து கால்வாய்களையும் துார்வார வேண்டும்.