அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி
வத்திராயிருப்பு: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9. 40 லட்சம் மோசடி செய்த ஸ்ரீவில்லிபுத்துார் அரசு பஸ் டிரைவர் சண்முகராஜ் உட்பட மூவர் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வத்திராயிருப்பு கீழ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் 48, இவர் வத்திராயிருப்பு டிப்போவில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டிப்போவில் பஸ் டிரைவராக பணியாற்றுபவர் சண்முகராஜ். இவர் தனது மைத்துனர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசிக்கும் சின்னப்பனும், அவரது மனைவி ராஜாத்தியும் பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். இதனை அவர் நம்பி, 2020ல் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தர ரூ. 9.40 லட்சம் வாங்கி 3 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் பணத்தை திரும்ப கேட்டபோது அவரை 3 பேரும் மிரட்டினர்.இதுகுறித்து வத்திராயிருப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் சண்முகராஜ், சின்னப்பன், ராஜாத்தி மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.