உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பசுமை வழிச்சாலையை உருவாக்க ரோட்டோரம் நடப்பட்ட மரக்கன்றுகள்

பசுமை வழிச்சாலையை உருவாக்க ரோட்டோரம் நடப்பட்ட மரக்கன்றுகள்

அ திகரித்து வரும் போக்குவரத்து காரணமாக ரோடுகள் விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. அவ்வாறு செய்யும்போது ஏற்கனவே இருந்த ரோட்டின் இருபுறமும் உள்ள பல ஆண்டு வயதுடைய மரங்கள் எல்லாம் வெட்டி அப்புறப்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஆகிவிட்டது. நான்கு வழிச்சாலைகள் உருவாகும் முன்பு வரை நாட்டில், மாநிலத்தில், மாவட்டத்தில், நகரங்களில் பசுமைவழிச் சாலையாக இருந்த ரோடுகள் எல்லாம் தற்போது போதிய அளவிற்கு நிழல் தரும் மரங்கள் இல்லாத சாலைகளாக மாறிவிட்டது. இதனால் ரோடுகளில் பயணிக்கும் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒரு மரத்தை அப்புறப்படுத்தினால் 10 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. இதே போல் மாநிலத்தின் வனப்பரப்பும் ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், அதை அதிகப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வனத்துறை மூலம் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ரெங்கர் கோயிலுக்கு செல்லும் ஊராட்சி ஒன்றிய ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமை வழிச் சாலையை உருவாக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக மேல தொட்டியபட்டியில் இருந்து ரெங்கர் கோயில் வனத்துறை எல்லை வரை உள்ள ரோட்டின் இருபுறமும் வேம்பு, புங்கை உட்பட பலவகை மரக்கன்றுகளை நட்டு அதனை சுற்றி வேலி அமைத்து வனத்துறை கொடுத்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ள சுகப்பிரியா மினரல் வாட்டர் நிறுவனம் தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் தண்ணீர் ஊற்றி முறையாக கண்காணித்து வளர்த்து வருகின்றனர். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த ரோடு மரங்கள் நிறைந்த பசுமை வழிச்சாலையாக உருவாகும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மரங்கள் வளர்ப்பது நமது கடமை

இன்றைய அறிவியல் உலகில் மண்ணில் பசுமை, குளுமை உருவாக வேண்டும் எனில் ஏராளமான மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது மிகவும் அவசியம். அது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு இயற்கையை ஒரு சொத்தாக வழங்க முடியும். - ராமராஜூ, இயற்கை ஆர்வலர்

இயற்கையை காப்போம்

தற்போது வனத்துறை நட்டியுள்ள மரக்கன்றுகளை நாங்கள் தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்து வளர்த்து வருகிறோம். தற்போது வெயிலின் தாக்கத்தில் கூட காலை, மாலை இரு நேரங்களில் தண்ணீர் ஊற்றுகிறோம். அடுத்த சில ஆண்டுகளில் ரெங்கர் கோவில் ரோடு மரங்கள் நிறைந்த பசுமை வழிச்சாலையாகும். -- தங்கம், மினரல் வாட்டர் நிறுவன அலுவலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை