சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக சாத்துார்,- சிவகாசி, கழுகுமலை சாலையை இணைக்கும் வகையில் 6.7 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரோடு அமைக்க ரூ.58.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி, எரிச்சநத்தம் --- சிவகாசி, சிவகாசி --- கன்னிசேரி, விருதுநகர்- - சிவகாசி, சாத்துார் --- சிவகாசி - கழுகுமலை, -- சிவகாசி -ஆலங்குளம், சிவகாசி --- வெம்பக்கோட்டை ரோடுகளை இணைத்து 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்க 2012ல் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021ல் சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. சுற்றுச் சாலை பணிக்காக ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர், கொங்கலாபுரம், திருத்தங்கல், கீழத்திருத்தங்கல், வெற்றிலையூரணி, நாரணாபுரம், அனுப்பன்குளம் ஆகிய 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த 82 நில உரிமையாளர்களிடம் இருந்து 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 147.4 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. சுற்றுச்சாலை பணிகளை 3 பிரிவுகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு மு தல் வடமலாபுரம் வரை ஸ்ரீவில்லிபுத்துார் - - சிவகாசி, சிவகாசி - -எரிச்சநத்தம், சிவகாசி --விருதுநகர் ரோடுகளை இணைக்கும் வகையில் 10.5 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. இரண்டாவது, மூன்றாம் கட்ட பணிகளுக்கான நில எடுப்பு பணிகள் 100 சதவீதம் முடிந்த நிலையில், ஜூன் மாதம் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதே மாதத்தில் இரண்டாம் கட்டமாக விஸ்வநத்தம் -- வெங்கடாச்சலபுரம், சாத்துார் - - சிவகாசி - கழுகுமலை - சிவகாசி - ஆலங்குளம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 6.7 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ.58.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை. எனவே இரண்டாம் கட்ட சுற்றுச்சாலை பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.