உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் ஓடும் டவுன் பஸ்கள் மழைக்கு ..ஒழுகுது: மாணவர்கள் பொதுமக்கள் அவதி

மாவட்டத்தில் ஓடும் டவுன் பஸ்கள் மழைக்கு ..ஒழுகுது: மாணவர்கள் பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும்.ஒவ்வொரு ஒன்றியங்களிலும் 48க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்குள்ளும் ஒன்று முதல் 20 கிராமங்கள் உள்ளது. மேலும் ஊராட்சி பகுதியில் இருந்து நகர் பகுதியில் உள்ள கல்லுாரி , பள்ளிகளுக்கும் அதிக அளவில் மாணவர்கள் தினந்தோறும் அரசு டவுன் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். தனியார் பஸ்கள் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட போதும் இலவச பஸ் பயணம் கருதி மாணவர்களும் பெண்களும் அரசு டவுன் பஸ்களையே நம்பியே உள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் டவுன் பஸ் களில் கால் வைக்கக்கூட இடம் இன்றி பயணிகள் பயணம் செய்யும் நிலை உள்ளது. அரசு பெரும்பாலும் விரைவு பஸ்கள் பாயிண்டு டூ பாயிண்ட் என மொபசல் பஸ்களாக ஓடிய பஸ்களை டவுன் பஸ் களாக மாற்றி ஊராட்சி பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. இந்த பஸ்கள் ஏற்கனவே பல கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்த நிலையில் இவற்றின் கூரைகள், படிக்கட்டுகள், ஜன்னல்கள் உடைந்து போன நிலையில் காணப்படுகிறது. கட கட என சத்தத்துடைன் இயங்கும் டவுன் பஸ்கள் அதிகம். தற்போது மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் இந்த பஸ்களின் கூரை களிலிருந்து மழை நீர் சொட்டு சொட்ட ஒழுகிய படியும் உட்காரும் இருக்கைகள் உடைந்தும் உள்ள நிலையிலும், பல பஸ்களில் ஜன்னல் சேதமடைந்து அடைக்க முடியாமலும் இருப்பதால் பயணிகள் நனைந்து கொண்டு பயணம் செய்யும் நிலையில் உள்ளனர். டவுன் பஸ் களில் திடீரென விளக்குகள் எரியாமல் போவதும் தொடர்கிறது. மழைக்காலத்தில் மழை நீர் ஒழுகுவதால் டிரைவர்களும் கண்டக்டர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பயணிகள் நலன் கருதி ஒழுகும் கூரைகள், மூட முடியாத கண்ணாடி ஜன்னல்கள் போன்றவற்றை விரைவில் சரி செய்து பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை