3 வழித்தடங்களில் ரயில் வேகம் அதிகரிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம், கேரளாவில் கூடுதல் ரயில் பாதை அமைப்பு, பழைய பாதைகள் புதுப்பிப்பு, 'சிக்னல்' மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறோம்.முக்கிய வழித்தடங்கள் மட்டும் இன்றி, மாவட்டங்களுக்கு இடையே செல்லும் ரயில் பாதைகளிலும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.மானாமதுரை - விருதுநகர் இடையே மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சென்ற ரயில்கள் இனி, 110 கி.மீ., வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மானாமதுரை - நரிக்குடி இடையே மணிக்கு, 90 கி.மீ., வேகத்திலும், அருப்புக்கோட்டை - விருதுநகர் இடையே, 75 கி.மீ., வேகத்திலும் செல்லும் வகையில் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.