அரசு தொலைதுாரப் பஸ்களில்யு.பி.ஐ.,பரிவர்த்தனையில் சிக்கல் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிப்பு
விருதுநகர்:அரசு தொலைதுாரப் பஸ்களில் சர்வரில் ஏற்படும் சிக்னல் பிரச்னையால் யு.பி.ஐ.,பரிவர்த்தனையில் (ஆன்லைன்) டிக்கெட் கட்டணத்தை செலுத்த முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் விரைவு, ஏ.சி., பைபாஸ் ரைடர், ஒன் டூ ஒன், டவுன் பஸ்களில் எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்து மின்னணு இயந்திரங்கள் மூலம் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு டிக்கெட் மிஷினுக்கும் தனி அடையாள எண் உள்ளது.இவற்றில் யு.பி.ஐ.,பரிவர்த்தனையின் மூலமாகவும் டிக்கெட் கட்டணத்தை பயணிகள் செலுத்த முடியும். அரசு டவுன் பஸ்களில் இப்பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படுவதில்லை. ஆனால் விரைவு, ஏ.சி., பைபாஸ் ரைடர், ஒன் டூ ஒன் ஆகிய தொலைதுாரம் பயணிக்கும் பஸ்களில் சர்வர் பிரச்னை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.இவற்றில் பயணத்தின்போது மின்னணு இயந்திரத்தில் சர்வர் சரியாக கிடைக்காமல் சிக்னல் தடை ஏற்பட்டு யு.பி.ஐ., மூலம் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் கண்டக்டர்களின் பணிகளில் பாதிப்பும், பயணிகள் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.கண்டக்டர்கள் கூறியதாவது:தொலை துாரம் சென்று வரும் அரசு பஸ்களின் வழித்தடங்களில் தடையின்றி சிக்னல் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் யு.பி.ஐ., கட்டணம் செலுத்துவதில் பிரச்னை தொடர்கிறது. பயணிகள் இதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.ஆனால் ஒரு புது நடைமுறையை விரிவுபடுத்தும் போது தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். இனியாவது இதில் நடவடிக்கை அவசியம் என்றனர்.