சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைசுந்தரேச அய்யர் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு
சென்னை:காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, பதிலளிக்க மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின் ஜாமினில் வெளியே வந்தனர். இவ்வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் அடங்கிய 'டேப்' ஒன்று வெளியாகி உள்ளது. சங்கராச்சாரியார், அவரது உதவியாளர், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, அவரது பிரதிநிதி ஆகியோரின் பேச்சுக்கள் அந்த 'டேப்'பில் உள்ளது என கூறப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து அந்தப் பேச்சு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி கோர்ட் விசாரணைக்கு தடை விதித்தார். இந்த தடையை நீக்கக் கோரியும், வழக்கில் தன்னையும் இணைக்கும்படியும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை ஏற்கக் கூடாது என சுந்தரராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிகண்டன் வதன் வாதாடினார்.இதையடுத்து, திருமுருகன் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சுகுணா தள்ளுபடி செய்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர், தன்னை வழக்கில் இணைத்துக் கொள்ளக் கோரி தாக்கல் செய்த மனு, நேற்று நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது. இதற்கு பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.