சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., ஆஜராக உத்தரவு
பெங்களூரு:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வரும், 27ம் தேதி நேரில் ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என, பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதன் பின்னர் வந்த, தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு பல்வேறு கால கட்டங்களை தாண்டி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது, கர்நாடக ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், ''சிறப்பு கோர்ட் வழக்கு விசாரணைக்கு, கர்நாடக ஐகோர்ட் தடைவிதிக்கவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டில் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். வழக்கு விசாரணையை இழுத்தடிக்க எதிர்தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கோர்ட் நடைமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும். வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அனுமதிக்கக் கூடாது. இ.பி.கோ., 313ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான தேதியை குறிப்பிட வேண்டும்'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கூறுகையில், ''இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், 313வது விதியின் கீழ், தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு, வரும், 27ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராக வேண்டும்'' என்றார்.அப்போது, ஜெ., வழக்கறிஞர் குமார் கூறுகையில், ''இ.பி.கோ. 313ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து சட்டத்திருத்தம் வந்துள்ளது'' என்றார்.இதற்கு நீதிபதி கூறுகையில், ''முதலில் கோர்ட் உத்தரவுப்படி செயல்படுங்கள். இது தொடர்பான மனு தாக்கல் செய்யுங்கள்'' என்றார்.