| ADDED : ஜூன் 11, 2024 08:21 PM
மதுரை:மதுரை 293வது ஆதினத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கில், ஜூன் 18ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கர்நாடகா நித்யானந்தா தியான பீடம் நித்தியானந்தாவின் சென்னையை சேர்ந்த பவர் ஏஜன்ட் நரேந்திரன் தாக்கல் செய்த மனு:மதுரை 292வது ஆதீனமாக இருந்தவர் அருணகிரிநாதர். இவர் நித்யானந்தாவிற்கு ஆச்சார்யா அபி ேஷகம் செய்து, அவரை 293வது ஆதீனமாக 2012 ஏப்., 27ல் நியமித்தார். நித்யானந்தாவை நியமித்ததை ரத்து செய்வதாக, 2012 அக்., 21ல் அருணகிரிநாதர் அறிவிப்பு வெளியிட்டார்.இதை எதிர்த்தும், தனது நியமனத்தை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரியும் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு செய்தார். அவரது நியமனத்தை ரத்து செய்த அறிவிப்பை அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி அருணகிரிநாதர் மற்றொரு மனு செய்தார். இது, நிலுவையில் உள்ளது.அருணகிரிநாதர் 2021 ஆகஸ்ட் 13ல் இறந்தார். மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 2021 ல் முடிசூட்டப்பட்டார். அவர், 'அருணகிரிநாதருக்கு பதிலாக தன்னை மனுதாரராக இணைத்துக் கொண்டு வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும்' என அதே நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை அனுமதித்த நீதிமன்றம், 293வது மடாதிபதியாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியரை நியமித்ததை அங்கீகரித்து உத்தரவிட்டது.அவர் 293வது ஆதீனமாக தொடர முகாந்திரம் இல்லை. முறைப்படி 292வது ஆதீனம் அருணகிரி மூலம் நித்யானந்தா 293வது ஆதினமாக நியமிக்கப்பட்டார். கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நரேந்திரன் குறிப்பிட்டார்.இந்த மனுவை, 2023ல் விசாரித்த தனிநீதிபதி: கீழமை நீதிமன்றம் மேலும் விசாரணையை தொடர தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று நீதிபதி ஆர்.விஜயகுமார் மனுவை மீண்டும் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.நீதிபதி: ஜூன் 18 ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு உத்தரவிட்டார்.