| ADDED : ஏப் 01, 2025 04:25 AM
ஈரோடு : கடும் வெயிலால் ஒரு மாதமாக பீர் விற்பனை, 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.வழக்கமாக குளிர் காலத்தில் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகிய மதுபானங்கள் அதிகமாகவும், பீர் விற்பனை குறைவாகவும் இருக்கும். வெயில் அதிகரிக்கும் போது பிராந்தி விற்பனை குறைந்து பீர் விற்பனை உயரும்.ஈரோடு மாவட்டத்தில், 182 டாஸ்மாக் கடைகளிலும், ஒரு மாதமாகவே பீர் விற்பனை உயர்ந்துள்ளது. கிங் பிஷர், பிரிட்டிஷ் போன்ற சில ரக பீர்களை மதுப்பிரியர்கள் விரும்பிக் குடிக்கின்றனர். காலையில் கிடைக்கும் இந்த ரகங்கள், மாலையில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் கிடைப்பதில்லை என வருந்துகின்றனர்.டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறியதாவது:
தற்போது வெயில் அதிகம் உள்ளதால், கடை திறந்தது முதல், 'அதிக சில்' உள்ள பீரை விரும்பி வாங்குகின்றனர். சராசரியாக மாநகர, நகர பகுதி கடைகளில் தினமும், 250 -- 300 பீர் பாட்டில் விற்பனையாகும். வெயில் அதிகமானதால், 320 -- 420 பாட்டில் வரை விற்கிறது. 'சில்னஸ்' குறைவாக இருந்தால் வாங்க மறுக்கின்றனர். பகலில் அதிகமாக பீரை வாங்குவதால், குறிப்பிட்ட பிராண்ட் பீர் சீக்கிரம் விற்று விடுகிறது. அதன் பின் வருவோருக்கு குறிப்பிட்ட பிராண்ட் கிடைக்கவில்லை. மற்ற மது வகைகள் விற்பனை சரிந்துள்ளன. கிராமப்பகுதி கடைகளுக்கு மிக குறைவாகவே பீர் அனுப்பப்படுவதால், அங்கும் பிரச்னை எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.