போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
சென்னை: பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள், கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 70 பேரை போலீசார் கைது செய்தனர். -சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஊதிய உயர்வு உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், கடந்த 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, 13வது நாளாக நடந்த போராட்டத்தில், 23 மாவட்டங்களை சேர்ந்த, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். சென்னை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டெய்சி மற்றும் அமுதா தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.