உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்திரை தாளுக்கு பதிலாக இ - ஸ்டாம்ப்; சார் பதிவு அலுவலகங்களில் விரைவில் வசதி

முத்திரை தாளுக்கு பதிலாக இ - ஸ்டாம்ப்; சார் பதிவு அலுவலகங்களில் விரைவில் வசதி

சென்னை: பத்திரப்பதிவில் முத்திரை தாள்களுக்கு பதிலாக, 'இ - ஸ்டாம்ப்' வசதியை, சார் - பதிவாளர் அலுவலகங்களில் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.சொத்து விற்பனை பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்புக்கு ஏற்ப, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மதிப்புக்கு முத்திரை தாள் வாங்கி, அதில் பத்திரங்கள் எழுதப்படும் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. இதற்காக, முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு, பதிவுத்துறை உரிமம் வழங்கி உள்ளது. இதற்கு மாற்று வழியாக, 'டிஜிட்டல்' முறையில், இ - ஸ்டாம்பிங் சேவை துவக்கப்பட்டது. இதன்படி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றுக்கான தொகைக்கு முத்திரை தாள் வாங்காமல், அதை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி, இ - ஸ்டாம்பிங் சான்றிதழை பெறலாம். இதை பத்திரத்துடன் இணைத்து, பதிவுக்கு தாக்கல் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில், இ - ஸ்டாம்பிங் முறையை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. துவக்கத்தில் ஒருசில சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான வசதியும், தனி பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இதற்கான தனி பிரிவுகள் செயல்படுவதில்லை.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் சொத்து மதிப்புகள் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப, முத்திரை தீர்வை, பதிவு கட்டணமாக செலுத்தும் தொகையின் மதிப்பும் அதிகரித்துள்ளது. அதனால், அதிக தொகைக்கு முத்திரை தாள் வாங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.எனவே, முத்திரை தீர்வை, பதிவு கட்டண தொகையில் ஒரு பகுதிக்கு மட்டும், முத்திரை தாள் வாங்கலாம், பெரும் பகுதி தொகையை இ - ஸ்டாம்பிங் முறையில் செலுத்த மக்கள் விரும்புகின்றனர். இதற்கான தொகையை மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, ஆன்லைன் முறையில், இ - ஸ்டாம்ப் வழங்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். தற்போது, ஆவண எழுத்தர் அலுவலகங்களில் இருப்பவர்கள், இதை கமிஷன் அடிப்படையில் செய்து கொடுக்கின்றனர். புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் பதிவு அலுவலகத்திலேயே, இ - ஸ்டாம்ப் வழங்கும் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதற்கென தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 5 ரூபாய் முதல் பல்வேறு தொகைக்கு இ - ஸ்டாம்ப் வாங்க முடிகிறது. எனவே, தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் இ - ஸ்டாம்ப் வழங்க, தனி பிரிவுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 'ஸ்டாக் ஹோல்டிங்' என்ற நிறுவனம் வாயிலாக, இ - ஸ்டாம்ப் வழங்கப்படுகிறது. இதன் இணையதளத்தில், பதிவு பெற்ற முகவர்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி, தேவையான மதிப்புக்கு, இ - ஸ்டாம்ப் பெறலாம். சார் - பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டால், பொது மக்கள் வெளியாட்களிடம் கூடுதல் செலவு செய்வது தடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gajageswari
மார் 29, 2025 07:37

₹200 ஸ்டாம்ப் பேப்பர் ₹250வரை விற்கப்படுகிறது. டாஸ்மாக் ₹10 கங்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை


Natarajan Ramanathan
மார் 26, 2025 12:01

நான் 2010ல் இந்த நடைமுறை இருந்தபோது ஒரே ஒரு நூறு ரூபாய் பத்திரம் வாங்கிவிட்டு மீதம் இ ஸ்டாம்பிங் முறையில் கட்டணம் செலுத்தினேன். இதனால் பத்திரம் விற்பவர்கள் அதிக விலைக்கு விற்பது தடுக்கப்படும். ஆனால் திராவிடத்தின் சாபக்கேடு எந்த நல்ல முறையையும் தடுத்துவிடுவார்கள்.


Shekar
மார் 26, 2025 09:41

மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளுக்குமுன்பே இது அமலுக்கு வந்துவிட்டது


Anand
மார் 26, 2025 10:43

கர்நாடகாவிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டது..


GMM
மார் 26, 2025 09:16

இ - ஸ்டாம்பு கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் உள்ளூர் தபால் நிலையம் மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொழில் நுட்பம் சார்ந்தது . சார் - பதிவு வேலைகள் கடினம். அங்கு வேலைப்பளு அதிகரித்தால் குளறுபடி கூடும். ஊழலுக்கு வழி வகுக்கும். பதிவு சட்டத்தில் சார் பதிவாளர் விற்பனை பிரதிநிதி ஆகலாம் என்று இருக்காது. ?


R S BALA
மார் 26, 2025 08:38

இங்கே கருத்தில் பலபேர் வேதனை புரிகிறது.. உண்மையில் எல்லாமே அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற மாற்றங்களை என்றோ செய்திருக்கலாம் ஆனால் எப்போதுமே செய்யவிடமாட்டார்கள் அப்படியே நடைமுறைக்கு வந்தாலும் சிலநாளிலேயே ஒழித்துக் கட்டிவிடுவார்கள் யோக்கியவான்கள்..


Minimole P C
மார் 26, 2025 06:50

very lazy department. No technology obsorbtion in the department for several decades. Officials have no time to countr their bribes and even plan for next bribe. Then how will they have time to think to serve better to poeple. curse of TN.


Appa V
மார் 26, 2025 06:27

வங்கிகளில் காசோலை செலுத்தி முழு கட்டணத்தையும் Franklin எனப்படும் e stamp முறை மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது


சூரியா
மார் 26, 2025 06:26

I பாண்டிச்சேரியில், 2021 அவரவர்கள், 2021 ஈ-ஸ்டாம்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த முறையே சிறந்தது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழங்குவது என்பது, ஒரு தீயில் இருந்து காக்க, தீக்குழியில் வீழ்வது போல் ஆகும். பெரிய மதிப்பு ஸ்டம்புகளை இப்பொழுதெல்லாம் யாரும் வாங்குவதில்லை. அக்ரிமென்ட், அஃபிடவிட் போன்றவற்றிற்கான சிறிய மதிப்பு ஸ்டாம்ப் பேப்பர்களே தேவை. அவைகளை, 2021 தபால் அலுவலகங்கள் மூலம், self adhesive stamp முறையில் வழங்கலாம்.


panneer selvam
மார் 26, 2025 16:23

Fake stamps are easy to produce .