| ADDED : நவ 04, 2025 04:52 AM
சென்னை: கடலுார் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள் பகுதியில், பொன்னிற குள்ளநரிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில், 3,652 ஏக்கர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் உள்ளன. இப்பகுதி, ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது பிரபலமான சூழலியல் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இப்பகுதியை ஒட்டி, அலையாத்தி காடுகள் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. பொதுவாக, அலையாத்தி காடுகள் பகுதிகளில், குள்ள நரிகள் இருப்பது வழக்கம். பிச்சாவரத்தில் படகு சவாரி செய்யும் போது, குள்ள நரிகளை பார்ப்பது அரிதான நிகழ்வாக அமைந்துள்ளது. தற்போது, அரிய வகையைச் சேர்ந்த பொன்னிற குள்ள நரிகள் பிச்சாவரத்தில் நடமாடுவது, வனத்துறையின் கள பணியாளர் குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியின் சூழலியல் தன்மை நல்ல நிலையில் உள்ளது என்பதை, இது உறுதி செய்வதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.