கோவை - நீலகிரியில் இன்று கனமழை
சென்னை:'கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில், ஒடிஷாவின் கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு, வடமேற்கில் நகர்ந்து வலுவடைய கூடும். தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 30ம் தேதி வரை மிதமான மழை தொடரும். கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுட மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.