சென்னை: 'தனியார் பஸ் கட்டண உயர்வு குறித்து, அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு, நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, உயர் மட்ட குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பயணியர் பஸ் கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த, 2018ல், தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அப்போது, லிட்டர் டீசல் விலை 63 ரூபாய். தற்போது, 92 ரூபாயாக உள்ளது. கேரளாவில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ஒரு ரூபாய் 10 காசும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு கி.மீ., 58 காசுகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஆண்டுதோறும் இந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர் மட்ட குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை: உள்துறை செயலர், போக்குவரத்து துறை செயலர், நிதித்துறை செயலர், போக்குவரத்து துறை செயலர் ஆகியோர் கொண்ட உயர் மட்டக்குழு அமைத்து, கடந்தாண்டு டிசம்பர் 6ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறை செயலர், சாலை பாதுகாப்பு கமிஷனர், சாலை போக்குவரத்து இயக்குனர், நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்ற நிபுணர் குழுவையும் அரசு அமைத்துள்ளது.இந்த நிபுணர் குழு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம், பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து கருத்து கேட்கும். பின், இந்த நிபுணர் குழு தன் பரிந்துரையை, உயர்மட்ட குழுவிடம் தாக்கல் செய்யும். அந்த பரிந்துரையை பரிசீலித்து, டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்று உயர்மட்ட குழு முடிவு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதை ஏற்ற நீதிபதி, 'பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, நான்கு மாதங்களுக்குள் தகுந்த முடிவு எடுத்து, அரசு அறிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.