தனிப்பட்ட தகராறுகளை தீர்க்க சட்டத்தை பயன்படுத்தக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: 'தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் மதுரையில் வெவ்வேறு கல்லுாரியில் படித்தனர். இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணை தன் ஊருக்கு அழைத்துச் சென்ற ஆண், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவருடன் உறவு கொண்டார். பின், ஜாதி வேறுபாட்டை காரணமாக கூறி, பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். அப்பெண், திண்டுக்கல் மாவட்ட மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு, 'இருவருக்கும் இடையிலான உறவு முற்றிலும் ஒருமித்த கருத்து மற்றும் பரஸ்பரம் அடிப்படையிலானது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'உறவு விரிசல் அடைந்ததால் மனுதாரரை வழக்கில் பொறுப்பாக்க முடியாது. பெண்ணை மனுதாரர் ஏமாற்றியதாக கூற முடியாது' என, தெரிவித்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: திருமணத்திற்கு முன் இருவரும், சம்மதத்துடன் உறவு கொள்வது அதிகரித்துள்ளது. உறவுகள் மோசமாகும் போது, குற்றவியல் நடவடிக்கைகளை துவங்குவதும் சமீபமாக அதிகரித்துள்ளன. கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல் அல்லது இயலாமை மூலம் பாதிக்கப்பட்டால் மட்டுமே சட்டம் தலையிட முடியும். தற்போது தனிப்பட்ட உறவு முறிந்த பின், அதை குற்றமாக சித்தரிக்கும் புகார்கள் அதிகரித்துள்ளன. தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மனுதாரரும், புகார்தாரரும் படித்தவர்கள். அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். அவர்களுக்கு இடையே நடந்தது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அடிப்படையிலானது. அந்நிலைக்கு சென்ற பிறகு, தனிப்பட்ட முரண்பாடுகளை, குற்ற நோக்கத்துடன் தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளை தீர்ப்பதற்கோ அல்லது பெரியவர்களுக்கு இடையிலான ஒருமித்த செயலை குற்றமென குறிப்பிடுவதற்கோ சட்டம் ஒரு கருவி அல்ல. இவ்வழக்கில் மனுதாரருக்கு எதிரான குற்றவியல் வழக்கு நடப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும். மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.