திருச்சி: ''பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன்,'' என, அமைச்சர் நேரு முன்னிலையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தி.மு.க., மாவட்டச் செயலர் குமுறியது கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. திருச்சி தி.மு.க., மத்திய மாவட்டச் செயலராக இருப்பவர் வைரமணி. தி.மு.க., முதன்மைச் செயலரும், மூத்த அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், கட்சி பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள், உரிய மரியாதை தருவதில்லை. இந்நிலையில், திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி' ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நேரு முன்னிலையில் வைரமணி பேசும்போது, ''என்னுடைய நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை மதிப்பதில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதில்லை. அழைத்தாலும், சம்பந்தப்பட்ட அழைப்பிதழில் என் பெயர், புகைப்படம் தவிர்க்கின்றனர். ''திரும்பத் திரும்ப இதை புகாராக சொல்வது எனக்கே அருவருப்பாக இருக்கிறது. ராணுவக் கட்டுப்பாட்டோடு நடக்கும் கட்சியில், புல்லுருவிகள் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. அதனால், மா.செ., பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன்,'' என்று கொந்தளிப்பாக பேசினார். ஆனால், இந்த பேச்சுக் குறித்து, அமைச்சர் நேரு, எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக சென்றது கட்சியினரை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி இருக்கிறது.