மண்டபத்துக்கு முன்பணம் திருப்பித் தராததால் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு
சென்னை : முன்பணத்தைத் திரும்பத் தராத, திருமண மண்டப உரிமையாளரால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெசன்ட் நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்த ஜம்புநாதன் என்பவர், திருவான்மியூர், கலா÷க்ஷத்ரா சாலை, ஜெய்ஸ்ரீ திருமண மண்டப உரிமையாளர் மீது, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: என் அண்ணன் மகள் திருமணத்தை, எதிர்மனுதாரர் திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்தோம். கடந்த 2010 ஜனவரி 20 முதல் 22ம் தேதி வரையிலான திருமண நிகழ்ச்சிகளுக்கு முன்பணமாக, 2009 அக்டோபர் 6ம் தேதி, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். 18 ஆயிரம் ரூபாய்க்குத் தான் ரசீது கொடுக்கப்பட்டது. மீதித் தொகை, மண்டப வாடகை, பாத்திர வாடகை உள்ளிட்டவற்றில் கழித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பணமாகத் தந்த பணத்தை திரும்பக் கேட்டேன். குறிப்பிட்ட தேதியில், திருமணத்திற்காக யாராவது மண்டபத்தை பதிவு செய்தபின், முன்பணத்தை திரும்பத் தருவதாகவும், இதுகுறித்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்யும்படியும் கூறினார். 2010 நவம்பர் வரை, முன்பணத்தை திரும்பத் தரவில்லை. முன்பணம் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் விளம்பரச் செலவு 2,884 ரூபாயை திரும்பத் தர வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த சென்னை (தெற்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி கோபால், உறுப்பினர்கள் மல்லிகா, தீனதயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில்,'மனுதாரர், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் தந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. 18 ஆயிரம் ரூபாய் கொடுத்ததற்கு மட்டும் ஆதாரம் உள்ளதால், அத்தொகையை, எதிர்மனுதாரர் திரும்பத் தர வேண்டும். விளம்பரச் செலவு 2,884 ரூபாய், நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவாக, 8,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.