மதுரை மீனாட்சி கோவிலுக்கு 1,233 ஏக்கர் நிலம் சொந்தம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக 12 மாவட்டங்களில், 1233.98 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. கோவில் தரப்பு வழக்கறிஞர் பரணிதரன், 'மீனாட்சி அம்மன் மற்றும் உப கோவில்களுக்கு சொந்தமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலம் உள்ளது. 133 பிளாட்கள், 108 கடைகள், மதுரை எழுகடல் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. 'செல்லுாரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் உள்ளவர்கள் வாடகைதாரர்களாக தொடர சம்மதித்துள்ளனர். மற்றவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'ஆவணங்களை படித்து பார்த்து மனுதாரர் அக்., 23ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அக்., 10ல் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆவணங்களை படித்து பார்த்து விபரங்களை மனுதாரர் அறிந்து கொள்ளலாம்' என்றனர்.