சாத்தான்குளம் வழக்கில் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு அறிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'போலீஸ் காவலின் போது, சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என மத்திய அரசு, இ - மெயிலில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென் று தாக்கினர். இதில், இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கான தண்டனையை ஏப்., 6ல், மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. தண்டனை விதிப்பது குறித்த நிலைப்பாட்டை, தமிழக அரசு தரப்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தரப்பில், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, 'இது போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணம்; பாரபட்சம் கூடாது. 'குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்' என, இ - மெயில் மூலம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.