100 அடி பள்ளத்தாக்கில் இறங்கியது மினி பஸ்; திருமண கோஷ்டியினர் பத்திரமாக மீட்பு
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து, ஊசிமலை பள்ளத்தாக்கில் இறங்கியது. அதில் பயணித்த 47 பேர் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் என்ற இடத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு, மினி பஸ்ஸில் 47 பேர் வந்துள்ளனர். பஸ்சை அந்தியூர் பகுதியை சேர்ந்த நல்லசிவம் 40 என்பவர் ஓட்டி வந்துள்ளார். பஸ் ஊசிமலை காட்சி முனை அருகே வந்த போது வளைவில் திரும்பாமல், நேராக 100 அடி பள்ளத்தாக்கில் இறங்கியது. அதில் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த சுஜிதா 27, சுகுணா 25, ஜெஸி சந்திரிகா 63 உள்ளிட்ட ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை கூடலூர் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு சென்று, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.காயமடைந்தவர்கள் மற்றும் பஸ்சில் பயணித்தவர்களை, கூடலூர் தீயணைப்புத் துறையினர், நடுவட்டம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கயிறு கட்டி மீட்டனர். விபத்து காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து தொடர்பாக நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.