உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளியில் சக மாணவருக்கு அரிவாள் வெட்டு; தமிழகம் எங்கே போகிறது என அன்புமணி வேதனை

பள்ளியில் சக மாணவருக்கு அரிவாள் வெட்டு; தமிழகம் எங்கே போகிறது என அன்புமணி வேதனை

சென்னை: சக மாணவரை அரிவாளால் வெட்டிய 8ம் வகுப்பு மாணவர் சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகம் எங்கே போகிறது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்காf அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பஸ்சை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன.இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gopinath A
ஏப் 15, 2025 17:18

ஐயா அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் fail ஆகும் மாணவனையும் 1 முதல் 8 வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை கொண்டுவந்ததே தவறு. நீதி போதனைகளை பற்றி பேசுறீங்களே கலாச்சாரமற்ற சமூகத்தை நோக்கி நம்ம சந்ததியினர் சென்று கொண்டிருக்கிறார்களே எப்படி தடுக்க போறீங்க. ஆசிரியர்கள் என்ன கடவுளர்களா......இல்ல இப்ப வேலைக்கு வர்ற ஆசிரியர்கள் மன அழுத்தம் அவர்கள் பாதுகாப்பு போன்றவை ஆட்சியாளர்கள் தயவு செய்து யோசிங்க.


Radhakrishnan Harichandran
ஏப் 15, 2025 16:50

"விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும்" அன்புமணி அவர்கள் கருத்து. இது திராவிட மாடல் விளையாட்டு பாடம் .


முக்கிய வீடியோ