| ADDED : ஜூன் 20, 2025 01:52 PM
சென்னை: பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 20) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இதற்கு ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்தார். பின்னர் நீதிபதி கூறியதாவது:* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும்.* அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.* பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளிப்படுத்தக்கூடாது என போலீசார் மற்றும் தமிழக டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மீறினால் வழக்கை விசாரித்த போலீசார் பொறுப்பாக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.