உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை

பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை

திருப்பூர்: ''பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பொறுப்பை அரசியல் கட்சியினரே ஏற்க வேண்டும்'' என்ற யோசனையை, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் குழுவிடம், கழிவு மேலாண்மை மன்றம் முன்வைத்துள்ளது. மக்காத பாலிதீன் உள்ளிட்ட குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பிரச்னை, மாநில அளவில் பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், இப்பணியில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இணைப்பு பாலமாக செயல்படும் நோக்கிலும் மாநில அளவில், 'கழிவு மேலாண்மை மன்றம்' து வங்கப்பட்டுள்ளது. இதன் காப்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், தலைவராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாகங்களின் தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் செயல்படுகின்றனர். கல்லுாரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்டோர். உறுப்பினர்களாக உள்ளனர். மன்றத்தின் செயலாளர் டாக்டர் வீரபத்மன் கூறியதாவது: குடியிருப்பு, ஓட்டல்,வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து உள்ளாட்சி நிர்வாகங்கள் சேகரிக்கும் மக்காத பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை எப்படி அகற்றுவது, யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் திணறுகின்றன. மக்காத கழிவுகளை அகற்றுவது தொடர்பான தெளிவான வழிகாட்டுதலும் இல்லை.

ஏ.ஐ., மூலம் சாத்தியம்

மக்காத பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குப்பைக் கழிவுகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக அகற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தொடர்பு இல்லை. இவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் தான், கழிவு மேலாண்மை மன்றம் துவங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களில் குவியும் பாலிதீன்

தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் திரளும் நிலையில், கூட்டம் முடிந்து அவர்கள் கலைந்து செல்லும் போது, டன் கணக்கில் பாலிதீன் பாட்டில், கவர் உள்ளிட்டவை சிதறிக்கிடக்கின்றன. அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடும் போது, அவர்களால் தங்களின் அன்றாடப்பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. உதாரணமாக, சில நாட்களுக்கு முன் கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த அசம்பாவித சம்பவத்தில், அங்கு சிதறிக்கிடந்த செருப்புகள் மட்டும், டன் கணக்கில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு குவிந்த குப்பைகளை அகற்றவே சில நாட்களாகியுள்ளது. இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவற்றில் குவியும் பாலிதீன் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை, மறுசுழற்சி நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அந்தந்த அரசியல் கட்சியினரே ஏற்க வேண்டும். கரூர் சம்பவத்தின் எதிரொலியாக, அரசால் நியமிக்கப்பட்டுள்ள, வழிகாட்டு நெறிமுறை வகுக்கும் குழுவினரின் கவனத்துக்கு, இந்த யோசனையை கொண்டு சென்றுள்ளோம்.

பாடமாக்க வேண்டும்

மேலும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக வைக்க வேண்டும். பாலிதின் பைக்கு மாற்றாக, இயற்கை சார்ந்த ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற யோசனையையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sun
அக் 11, 2025 17:00

ஒவ்வொரு கட்சியும் அதன் வளர்ச்சிக்காகவே பொதுக் கூட்டங்கள் நடத்துகின்றன. நடத்தச் சொல்லி அரசோ மற்றவர்களோ வலியுறுத்துவதில்லை. அதனால் அதற்கான பொறுப்பும் அந்தந்த கட்சிகளையே சார்ந்தது. ஒரு பொதுக் கூட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டால் அதில் உயிரிழப்பு, காயம் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்த கட்சியே ஏற்க வேண்டும் . உதவி, மற்றும் இழப்பு தொகையை அந்தந்த கட்சிகளே வழங்க வேண்டும். கண்டிப்பாக அந்த கட்சியின் தன்னார்வலர்கள் பெயரை 100 பேருக்கு 2 பேர் வீதம் வருவாய்துறை , காவல்துறையிடம் தர வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வருவாய் துறையால் வழங்கப் பட வேண்டும். அவர்களே குடி தண்ணீர் மற்றும் உணவுக்கு பொறுப்பாளர் ஆவார்கள். கூட்டம் முடிந்த பின்அவர்கள் ஏனைய கட்சிக் காரர்களுடன் இணைந்து பிளாஸ்டிக், மற்றும் பிற பொருட்களை அப்புறப் படுத்தி பழைய நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை ஒப்படைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர், செயலாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்.


Natchimuthu Chithiraisamy
அக் 11, 2025 13:35

கழிவு மேலாண்மை மன்றம் குப்பை பராமரிப்பு மன்றம் என்றெல்லாம் அமைப்பை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை குப்பையை சரியான இடத்தில கொட்ட. ஒன்று நல்ல மக்கள் இல்லை நல்ல அதிகாரமுள்ள அரசு அலுவலம். இரண்டும் இல்லை என்றால் மூன்றாவது பூமி ஒரு சில மினிடம் நின்றால் போதும் குப்பையும் மனிதனும் கலந்து விடுவான் பாவம் இவர்களோடு சேர்ந்து பாவம் செய்யாது விலங்குகளும் சாகும்


karuththuraja
அக் 11, 2025 12:33

நம்ம நாட்டில் பிளாஸ்டிக் பை உபயோகிக்க கூடாதுனு ஆஃபீஸ்ர் ஸ்ட்ரீட்டா இருக்கிறதா சொல்லுறாங்க, நீங்க என்னனா அரசியல் கூட்டத்தில் பிளாஸ்டிக் பை வருது என்றால் ஆஃபீஸ்ர் மீது நடவடிக்கை தேவை, கோர்ட் வழிகாட்டுதலில் நடவடிக்கை எடுக்கவும்.


M Ramachandran
அக் 11, 2025 12:32

RSS மற்றும் பாஜாக அவர்கள் போடும் போது கூட்டஙகுகளுக்கு பின் தொண்டர்கள் பிளாஸ்டிக் கழிவுகளியை மூட்டைய்யகளில் சேகரித்து வெளியில் உள்ள கிடங்கில் சேர்த்து விடுகிறார்கள். இந்த பழக்கத்தை எல்லா கட்சியினரும் பின் பற்றலாம்.


M. PALANIAPPAN, KERALA
அக் 11, 2025 12:07

நல்ல யோசனை, கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்


Sun
அக் 11, 2025 10:44

ஏற்கெனவே நாங்க சுத்தப்படுத்திகிட்டு தானே இருக்கோம். பிளாஸ்டிக் சேரை எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு தலையில வச்சு வீட்டுக்கு கொண்டு போறோமே?


சந்திரசேகர்
அக் 11, 2025 10:38

பாலீத்தீன் பைகளுக்கு தான் ஆல்ரெடி மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளனவே. அப்புறம் எப்படி பாலீத்தீன் பைகள் கிடைக்கின்றது.


Ramesh Sargam
அக் 11, 2025 09:10

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் முடிந்தபின் அங்கு சிதறிக்கிடக்கும் குப்பைகளை மட்டும் அகற்றினால் மட்டும் போதாது. அங்கு ஒருவேளை கரூர் போன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், நடக்கக்கூடாது, ஒருவேளை நடந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்துதரவேண்டும். அதற்கு ஒப்புதல் என்றால் மட்டுமே கூட்டம் கூட்டவேண்டும். இல்லாவிட்டால் கூட்டம் கூட்ட அனுமதி மறுக்கப்படவேண்டும். அது ஆளும் கட்சியே ஆக இருந்தாலும். வேண்டாம் மீண்டும் ஒரு கரூர் சம்பவம்.


duruvasar
அக் 11, 2025 07:37

தமிழகத்திற்கு தேவை அறிக்கைகள் மட்டுமே. .


புதிய வீடியோ