உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளில் பிரசவம் பார்க்காதீர் தாய், குழந்தை உயிருக்கு ஆபத்து பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

வீடுகளில் பிரசவம் பார்க்காதீர் தாய், குழந்தை உயிருக்கு ஆபத்து பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை:பிரசவத்திற்கான மருத்துவமனை கட்டணம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தொந்தரவு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் நடைமுறை அதிகரிக்க துவங்கியுள்ளது.சமீபத்தில், சென்னை குன்றத்துார் பகுதியில், இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து, 1,000 பேர் அடங்கிய, 'வாட்ஸாப்' குழு அமைத்து, அதில் பிரசாரம் செய்யப்பட்டது. அதேபோல், வீட்டிலேயே பிரசவமும் நடந்தது. இதில், தாய், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.இதேபோல், புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதில், குழந்தை உயிரிழந்தது. இதில், 'யு டியூப்' பார்த்து மாமியாரும், கணவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.இதுபோன்று, சமூக வலைதளங்களை பார்த்து வீட்டிலேயே சிகிச்சை பெறுதல், பிரசவம் பார்த்தல் அதிகரித்து வருவது ஆபத்தாக முடியும் என, பொது சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழக அரசு, பிரசவ கால உயிரிழப்பை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில், போதிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில், அறுவை சிகிச்சை இல்லாத பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. எனவே, வீடுகளிலேயே பிரசவம் பார்க்க நினைப்போர், அந்நிலையில் இருந்து மாற வேண்டும். இயற்கை பிரவசம் வேறு, வீட்டு பிரசவம் வேறு; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.வீடுகளிலேயே பிரவசம் பார்க்கும்போது, திடீரென ஏற்படும் சிக்கலான நிலையை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தாய் அல்லது குழந்தை அல்லது இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எவ்வித பிரச்னையும் இல்லாத கர்ப்பிணியருக்கு, எந்நேரத்திலும் சிக்கல் ஏற்படலாம்.முக்கியமாக பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு, நோய் தொற்று, குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்களில், திடீரென ஏற்படும் ஆபத்து நேரத்தில், இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும்.வீட்டில் ஏற்படும் பிரசவத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூக வலைதளங்களை பார்த்து, பிரசவம் பார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ravi Chandran
டிச 15, 2024 17:11

சுகப்பிரசவம்-சுயபிரசவம்-தன் மகப்பேறு சுயமாக முடிவெடுத்து தன்னுடைய மகப்பேறை சுய பிரசவம் செய்வது சுகப்பிரசவமாகும். இந்த முடிவை எடுக்கும் உரிமை குழந்தையை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு மட்டுமே உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை