உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜிவ் கொலை வழக்கு கைதியை "பரோலில் விட கோரி தாயார் மனு : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கு கைதியை "பரோலில் விட கோரி தாயார் மனு : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி ரவிச்சந்திரனை பரோலில் விடக்கோரும் மனுவை இரு வாரங்களுக்குள் பரிசீலிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த ரிட் மனு: ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் என் மகன் ரவிச்சந்திரன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி தடா கோர்ட் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அங்கு முருகன், சாந்தன், பேரறிஞனுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன் உட்பட நால்வருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் ஏற்கனவே வேலூரிலும், தற்போது மதுரை சிறையிலும் 15 ஆண்டுகளாக உள்ளார். என் பெயரிலுள்ள சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்றவும், அருப்புக்கோட்டை வீட்டை செப்பனிடவும் முடிவு செய்துள்ளேன். இதற்கு ரவிச்சந்திரன் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். இதற்காக ஒரு மாதம் பரோலில் விடக்கோரி ரவிச்சந்திரன் சிறை அதிகாரிகள் மூலம் உள்துறை செயலாளருக்கு மனு செய்தார். நானும் மனு கொடுத்தேன். மனு மீது இதுவரை எந்த உத்தரவும் இல்லை.

ரவிச்சந்திரனை ஒரு மாதம் பரோலில் விட உத்தரவிட வேண்டும். பத்துநாட்கள் பரோலில் விட இடைக்கால உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆஜராயினர். அரசு தரப்பில் வக்கீல் ஆனந்த்ராஜ் ஆஜரானார்.

நீதிபதி ஆர்.சுதாகர், ''தண்டனை நிறுத்தி வைப்பு சட்ட விதிகளின்படி மனுதாரர் மனுவை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து, ரவிச்சந்திரனை பரோலில் விடுவது குறித்து உள்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை