இனி காலனி என்ற பெயர் இருக்காது :தெருக்களின் ஜாதி பெயர்களும் மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு, ஜாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற வேறு பாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட, சமூக அமைப்பை நோக்கி, பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது . அந்த வகையில், 'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், 'காலனி' என்ற சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்.,29ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் தலைமையில், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஜாதி பெயர்களை நீக்குதல், மறு பெயரிடுதல் தொடர்பாக, ஏப்., 1 மற்றும் மே 19ம் தேதிகளில் ஆய்வு கூட் டம் நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள, ஜாதி பெயர் களை நீக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் பணியை துவங்க வேண்டும். இவற்றை, வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர்கள், குறிப் பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இரட்டை வேடம் போடுகிறது அரசு ஜாதி பெயர்களை மாற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு எனப் பெயர் வைக்கிறது. ஜாதி பெயரை மாற்றுங்கள் என்ற உத்தரவு ஒரு புறம்; ஜாதி பெயரில் பாலத்திற்கு பெயர் வைத்தல் மறுபுறம். இந்த முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான் திராவிட மாடல். அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதலில், கோவை அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும், 'ஜி.டி.நாயுடு' பெயரை மாற்றுங்கள். அதேபோல், ஜாதியற்ற சமுதாயம் படைக்க, அமைச்சர்கள், அவரவர் சார்ந்த ஜாதி சங்க விழாக்கள், கூட்டங்கள், மாநாடுகளுக்கு செல்வதற்கு, முதல்வர் தடை விதிக்க வேண்டும். - ராம ரவிக்குமார் தலைவர், இந்து தமிழர் கட்சி
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுமா?
கோவையில், அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மேம்பாலத்திற்கு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த, இந்தியாவின் எடிசன், ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, அரசு சொத்துக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டப்படி, ஜி.டி., நாயுடு பெயர் சூட்டப்படுமா அல்லது பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.