உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இருப்போருக்கு அதிகாரிகள் வீடுகளில் வேலை

அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இருப்போருக்கு அதிகாரிகள் வீடுகளில் வேலை

சென்னை: வனத்துறையில் கள நிலையில், முதல் அடையாளமாக இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை அதிகரிப்பதற்கான பணிகளும் முடங்கியுள்ளன. தமிழக வனத்துறையில், களத்தில் முதல் நபராக வேட்டை தடுப்பு காவலர்கள் நிற்கின்றனர். காப்புக்காடுகள் முதல் புலிகள் காப்பகம் வரை அனைத்திலும், காடுகளுக்குள் நடந்து சென்று, வேட்டை, குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது வரை வேட்டை தடுப்பு காவலர்களுக்கான வரையறுக்கப்பட்ட பணியிட எண்ணிக்கை, தேர்வு நடைமுறைகள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வனத்துறையில், 1,200 பேர் வேட்டை தடுப்பு காவலர்களாக இருந்தனர். இதில், வயது மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதி உடையவர்கள், வனக்காவலர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இது மட்டுமல்லாது, வயது மூப்பு காரணமாக பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். இவர்களுக்கு பதிலாக, புதிய நபர்கள் நியமிக்கப்படாததால், பல இடங்களில் வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வேட்டை தடுப்பு காவலர்கள் கூறியதாவது: வனப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு குறைகிறது. இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் பலர், அதிகாரிகளின் வீடுகளில் வேலையாட்களாக பயன்படுத்தப்படுகின்றனர். வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்கும் பணிகளில், வனத்துறை ஆர்வம் காட்டாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப, வேட்டை தடுப்பு காவலர்களை புதிதாக நியமிப்பதற்கான பணிகளை விரைவில் துவக்க உள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ