பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு
சென்னை: கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி முதல் வரும், 4ம் தேதி வரை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணியில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இது, 95.6 சதவீதம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி பேரிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இது, 40.4 சதவீதம். வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டு படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதை கிளிக் செய்து, மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதிகாரிகள் இன்று ஆய்வு
தமிழகத்தில் நடந்து வரும், 'எஸ்.ஐ.ஆர்.,' எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து, தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் இன்று கள ஆய்வு செய்ய உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவை சேர்ந்த துணை இயக்குனர்கள் பவன், தேவன்ஷ் திவாரி ஆகியோர், இன்று முதல், 26ம் தேதி வரை, எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பான, ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் கள ஆய்வும் செய்கின்றனர். மாவட்ட அளவில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக, கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் மற்றும் டிஜிட்டல் பதிவேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, செல்ல உள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயலர் மதுசூததன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று, எஸ்.ஐ.ஆர்., பணியை ஆய்வு செய்ய உள்ளார்.