உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசைவாணி விவகாரத்தை சும்மா விடமாட்டோம்: பா.ஜ., அறிவிப்பு

இசைவாணி விவகாரத்தை சும்மா விடமாட்டோம்: பா.ஜ., அறிவிப்பு

மதுரை : ''சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்' என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இசைவாணி மீது பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர். அதில், 'இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். 'ஐம் சாரி ஐயப்பா' என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல், ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட எண்ணத்துடன் இசைவாணி செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ''இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதித்துறையை நாடுவோம்.''ஹிந்து மதக் கடவுள்கலை திட்டமிட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சதியாகத்தான் பார்க்கிறோம். இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது,'' என்றார்.

பக்தர்களுக்கு மன வேதனை

சபரிமலை ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானாபாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாத்திக சக்திகளும், பிரிவினைவாதிகளும், இரண்டு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. நீலம் பண்பாட்டு மைய அமைப்பின் பா. ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர், ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடி, அதை வெளியிட்டுள்ளனர்.ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் கார்த்திகை மாதத்தில், இதுபோன்ற பாடலை வெளியிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், எங்கள் கட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி