சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை
மணிலா: பிலிப்பைன்சில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய, 9ம் வகுப்பு மாணவர் சக மாணவரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்தார். தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள அட்டீனியோ டி சாம்போங்கா பல்கலை வளாகத்தில், உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. நேற்று காலை பள்ளிக்கு வந்த, 9ம் வகுப்பு மாணவர் முகமது மெயில் ஜலானி, இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தார். முதலில், ஒரு ஆசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர், பின், நான்காவது தளத்திற்கு சென்று, 10ம் வகுப்பு மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றார். மேலும், அங்கிருந்த மாணவர்களை நோக்கி சுட்டதில் இருவர் காயமடைந்தனர். அதன்பின், ஐந்தாவது தளத்திற்கு சென்ற ஜலானி, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார். இச்சம்பவத்தால் பள்ளியின் நாலாபுறமும் மாணவர்கள் சிதறியடித்து ஓடினர். தாக்குதல் நடத்திய ஜலானி, சம்பவத்தை நேரலை செய்வதற்காக, உடலில் கேமரா அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. ஜலானிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது; தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.