துருக்கியில் நிலநடுக்கம் ஒருவர் பலி
அங்காரா: மேற்கு ஆசிய நாடான துருக்கியின் மத்திய தரைக்கடல் எல்லையோரப் பகுதிகளில் நேற்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரோட்ஸ் நகரில் இருந்து 18 கி.மீ., தொலைவில், 68 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிரீஸ், மேற்கு துருக்கி மற்றும் அருகிலுள்ள ஏஜியன் கடற்கரைப் பகுதி வரை உணரப்பட்டது. வீடுகள், வணிக வளாகங்கள், ஹோட்டல் கட்டடங்கள் சில நிமிடங்களுக்கு குலுங்கின. துருக்கியின் மர்மாரிஸ் நகரில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அங்கு உள்ள தங்கும் விடுதிகள் கடுமையாக குலுங்கின. இதில் பீதியடைந்து மயங்கிய 14 வயது சிறுமி ஒருவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.