உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மன்னிப்பு கேட்ட மறுநாளே அண்டை நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

மன்னிப்பு கேட்ட மறுநாளே அண்டை நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் அதிபர் பெஷெஸ்கியான் நேற்று முன்தினம் மன்னிப்பு கேட்டார். அங்கிருந்து தாக்குதல் வராதபட்சத்தில் அண்டை நாடுகளை தாக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார். ஆனால், நேற்றும் தன் அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

குவைத்:

• குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. குவை தீயணைப்பு படையினரின் நீண்ட போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், விமான நிலையத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=brrg988r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0• இதேபோன்று, குவைத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள சமூக பாதுகாப்புக்கான பொது நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், பலமாடி கட்டடம் முழுதும் தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி இந்த அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டு, அதன் சேவைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன • இந்த தாக்குதலை அடுத்து, குவைத் தன் கச்சா எண்ணெய் உற்பத்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைத்துள்ளது • மேலும், குவைத் ராணுவம், தன் வான்வெளியில் ஊடுருவிய பல ஈரான் ட்ரோன்களை தடுத்து அழித்ததாக தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் இரு குவைத் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

சவுதி அரேபியா:

• அமெரிக்க ராணுவம் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளம் மற்றும் ஷைபா எண்ணெய் கிணறுகளை நோக்கி வந்த மூன்று ஏவுகணை மற்றும், 15க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்து அழித்துள்ளதாக சவுதி ராணுவம் தெரிவித்துள்ளது

கத்தார்:

• கத்தாரை நோக்கி ஏவப்பட்ட, 12 ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்து விட்டதாகவும், தவறவிட்ட சில ஏவுகணைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், கடற்பகுதியிலும் விழுந்ததாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:

• போர் துவங்கியதில் இருந்து இதுவரை, 221 ஏவுகணைகள் மற்றும் 1,300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்துள்ளதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் போர் காலத்தில் இருப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்

பஹ்ரைன்:

• தலைநகர் மனாமா மீது வீசப்பட்ட 92 ஏவுகணைகள் மற்றும் 151 ட்ரோன்களை தடுத்துள்ளதாக, பஹ்ரைன் தெரிவித்துள்ளது.

லெபனான்:

• லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த, ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதியினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். குடிநீர் தட்டுப்பாடு! ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று, பஹ்ரைனின் குடிநீர் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்யும் மிக முக்கிய உள்கட்டமைப்புகளில் ஒன்றான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை சேதப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலால் அந்நிலையத்தின் முக்கிய இயந்திரங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பஹ்ரைன் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், 'இது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதல்' என கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அமைதியை குலைப்பதாக உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

21 அமெரிக்க வீரர்கள் பலி!

மேற்காசிய நாடான பஹ்ரைனின் ஜுபெய்ர் மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்தில், அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு மீது நேற்று ஈரான் நேரடியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில், 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ரேடார் வசதிகள், சேவை கட்டடங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு முனையங்கள் உட்பட பல கட்டமைப்புகளில் சில அழிக்கப்பட்டதாகவும், சில பலத்த சேதமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஐந்தாவது படைப் பிரிவு என்பது, பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் அரபி கடல் உட்பட 25 லட்சம் சதுர மைல் பரப்பளவிலான நீர்நிலைகளை கண்காணிக்கும் முக்கிய பிரிவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !