பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட இருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் களமிறங்குகின்றனர். குறைந்தது 85 மீ., துாரம் எறிந்தால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், தகுதிச்சுற்றில் 'பி' பிரிவில் களமிறங்கினார் நீரஜ் சோப்ரா.ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு தரப்பட்டன. முதல் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா 89.34 மீ., துாரம் எறிந்தார். இந்த சீசனில் இவர் எறிந்த சிறந்த துாரமாக இது அமைந்தது. இதையடுத்து ஒரே வாய்ப்பில் பைனலுக்கு முன்னேறி அசத்தினார் நீரஜ் சோப்ரா. தவிர தகுதிச்சுற்றில் இவரது சிறப்பான துாரமாகவும் இது அமைந்தது. டோக்கியோ போல...
டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் (2021) நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பில் 86.65 மீ., துாரம் எறிந்து, 'பி' பிரிவில் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறி இருந்தார். இதேபோல, இம்முறையும் முதல் வாய்ப்பில் அதிக துாரம் எறிந்து, தகுதிச்சுற்றில் இரு பிரிவிலும் சேர்த்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறியுள்ளார். ஆக. 8ல் நடக்கும் பைனலிலும் சிறப்பாக செயல்பட்டு, ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் வென்று தர காத்திருக்கிறார். ஆண்டர்சன் அபாரம்
இரு முறை உலக சாம்பியன் ஆன கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 88.63 மீ., துாரம் எறிந்து ஒட்டுமொத்தமாக 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.76 மீ.,), பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (86.59 மீ.,), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் (85.63 மீ.,) உள்ளிட்டோரும் பைனலுக்கு முன்னேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியின் இளம் வீரர் மேக்ஸ் டெஹ்னிங், அதிகபட்சம் 79.24 மீ., துாரம் மட்டும் எறிந்து வெளியேறினார். கிஷோர் ஏமாற்றம்
தகுதிச்சுற்று 'ஏ' பிரிவில் களமிறங்கினார் மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா. ஆசிய விளையாட்டில் 87.54 மீ., துாரம் எறிந்த இவர், நேற்று முதல் வாய்ப்பில் 80.73 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பு பவுல் ஆனது. மூன்றாவது, கடைசி வாய்ப்பில் 80.21 மீ., துாரம் மட்டும் எறிய, பைனல் வாய்ப்பை இழந்தார்.