உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஈரான் - அமெரிக்கா இடையேயான இரண்டு நாள் உயர்மட்ட பேச்சு நிறைவு

 ஈரான் - அமெரிக்கா இடையேயான இரண்டு நாள் உயர்மட்ட பேச்சு நிறைவு

ஓபர்ஜென்: ஈரான் - அமெரிக்க இடையேயான உயர்மட்ட பேச்சு நிறைவடைந்ததாக மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான் - கத்தார் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. மேற்காசிய நாடான ஈரானுடன் போர் நிறுத்தம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட 14 அம்சங்களுடன் கூடிய தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டு உள்ளது. கால அவகாசம் நிரந்தர ஒப்பந்தத்தை எட்ட தேவையான சாத்தியகூறுகள் மற்றும் தீர்க்க வேண்டிய பிரச்னைகளை 60 நாள் காலஅவகாசத்துக்குள் பேசி தீர்த்துக்கொள்வதென இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையில் அமெரிக்க குழுவும், ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையில் அந்நாட்டு குழுவினரும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேசினர். மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகளும், சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சரும் இதில் பங்கேற்றனர். குறிப்பாக இப்பேச்சில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நீடிக்கும் இரண்டு நாட்களாக நடந்து வந்த பேச்சு நேற்று நிறைவடைந்ததாக, மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் மற்றும் பாகிஸ்தான் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. உயர்மட்ட பேச்சுக்கள் நிறைவடைந்தாலும், இந்த வாரம் முழுதும் பிற தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்தான பேச்சுக்கள் தொடரும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் எண்ணெய்க்கு

தற்காலிக அனுமதி

சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட பேச்சைத் தொடர்ந்து, ஈரானிய கச்சா எண்ணெய் உற்பத்தி, விற்பனை மற்றும் போக்குவரத்து தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க நிதியமைச்சகம் ஒரு தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது. இந்த அனுமதி வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி வரை 60 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைகள் வரம்பின்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு கப்பல் போக்குவரத்து, எரிபொருள் நிரப்புதல் மற்றும் காப்பீடு போன்ற கடல்சார் சேவைகளுக்கும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான மற்றும் தடையற்ற போக்குவரத்து மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றை வழங்க ஈரான் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் வெளிநடப்பு

தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்கு பின், சுவிட்சர்லாந்து சென்ற இருதரப்பினரும், பேச்சு நடத்துவதற்கான அரங்கத்திற்குள் கூடினர். இதை புகைப்படம் எடுக்க ஊடகத்தினர் தயாராகினர். இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இடம் ஏதோ பேசிவிட்டு, தன் குழுவினருடன் அந்த அரங்கை விட்டு தற்காலிக வெளிநடப்பு செய்தார். இச்செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் அசிம் முனீர் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர். அப்போது, அங்கு வந்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், ஷெரீப் மற்றும் முனீரிடம் இது குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவினர், ஈரானிய குழுவினரை சமரசம் செய்து மீண்டும் பேச்சு நடக்கும் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அதன் பின் இரு தரப்பிடையே பல்வேறு முக்கிய விவாதங்கள் சுமூகமாக நடந்து முடிந்தன. ஈரானின் இந்த தற்காலிக வெளிநடப்பு காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. லெபனானை காரணம் காட்டி அமைதி பேச்சில் தொய்வு ஏற்படுத்த கூடாது என ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டவே இந்த தற்காலிக வெளிநடப்பை ஈரான் செய்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை