உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதான ம்

 பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதான ம்

- நமது நிருபர் - பெலகாவி நகர் அரசு பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியுள்ளது. இங்குள்ள பாலபவன் கட்டடத்தில், பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர். பெலகாவி நகரில், 1997ல் இரண்டு ஏக்கர் பரப்பளவில், பாலபவன் கட்டப்பட்டது. சரியான நிர்வகிப்பு இல்லாத காரணத்தால், நாளடைவில் சிறார்களுக்கு பயன்படாமல் பாழடைந்து போனது. உள்விளையாட்டு அரங்கம் கட்டும்படி, அரசு பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி ராகுல் சிந்தே, பாழடைந்து கிடந்த பாலபவன் கட்டடத்தை, சிறார்களுக்கு பயனுள்ள வகையில் மேம்படுத்த திட்டம் வகுத்தார். 35 லட்சம் ரூபாய் செலவில், தரமான பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. பாலபவன் நிர்வாகம், 20 லட்சம் ரூபாயும், எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டது. அனைத்து வசதிகளும் கூடிய, பாக்ஸ் கிரிக்கெட் மைதானம், கடந்த வாரம் திறக்கப்பட்டது. தங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதால், அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி ராகுல் சிந்தே கூறியதாவது: பாழடைந்திருந்த பாலபவன் கட்டடத்தில், பாக்ஸ் கிரிக்கெட் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளி சிறார்களுக்காக, மாநிலத்தில் எந்த இடத்திலும் இத்தகைய சிறப்பு மைதானம் கட்டப்படவில்லை; தற்போது கிரிக்கெட் பயிற்சியும் துவங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 25 சிறார்களுக்கு, கிரிக்கெட் பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தற்போதைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும். வரும் நாட்களில், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்படும். அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச உணவு, தங்கும் வசதி உள்ளது. மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பது குறித்து, ஆனந்தா அகாடமி என்ற கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அனுபவம் மிக்க விளையாட்டு வீரர்கள் பயிற்சி அளிப்பர். பாக்ஸ் கிரிக்கெட் மைதானம், அதி நவீனமானது. தரமான தரை டைல்ஸ், நெட், நிழல் வசதி, வெளிச்சம், பாதுகாப்பு சாதனங்கள் என, கிரிக்கெட் விளையாட தேவையான அனைத்து சாதனங்களும் உள்ளன. மாவட்ட பாலபவன் கமிட்டி, கிரிக்கெட் மைதானத்தை நிர்வகிக்கும். பெலகாவி மாவட்ட சிறார்கள், பயிற்சி மையத்தை பயன்படுத்த வேண்டும். வரும் நாட்களில், மாவட்ட சிறார் களும் தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை