பெண்களுக்காக உடை மாற்றும் அறை அமைத்த யுவ பிரிகேட ் அமைப்பினர்
நஞ்சன்கூடின் ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் அருகேயுள்ள கபிலா ஆற்றில் புனித நீராடும் பெண்கள், உடை மாற்ற இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் வசதிக்காக உடை மாற்றும் அறை அமைக்கப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். அப்படி வருவோர் கோவில் அருகேயுள்ள கபிலா ஆற்றில், புனித நீராடிய பின் ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசனம் செய்வர். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற, 'சக்தி' திட்டம் அறிமுகமான பின், இக்கோவிலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்கள், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் பெண்கள் அதிகம் வருகின்றனர். கபிலா ஆற்றில் நீராடிய பின், உடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மரங்களின் மறைவிலோ அல்லது சுவர்களின் மறைவிலோ தயக்கம், பயத்துடன் உடை மாற்றும் சூழ்நிலை இருந்தது. இது, அவர்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியதுடன், தர்மசங்கடமாகவும் இருந்தது. பெண்களின் அவதியை கண்ட, 'யுவ பிரிகேட்' அமைப்பின் இளைஞர்கள், கபிலா ஆற்றங்கரையில் பெண்களுக்காக உடை மாற்றும் அறை அமைத்துள்ளனர். இது, பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. நிம்மதியாக உடை மாற்றிக்கொண்டு, ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசிக்க செல்கின்றனர். தங்களுக்கு உடை மாற்ற வசதி செய்யும்படி, மாநில அரசிடம் பல ஆண்டுகளாக பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், பயன் இல்லை. யுவ பிரிகேட் அமைப்பினர், தாங்களாகவே முன் வந்து உடை மாற்றும் அறை அமைத்தை பக்தர்களும், பெண்களும் பாராட்டுகின்றனர். யுவ பிரிகேட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் மாளவாடு கூறியதாவது: பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம். அதிகமான ஆண்கள் நிறைந்துள்ள ஆற்றங்கரையில், பெண்களால் உடை மாற்ற முடியாது. இதை மனதில் கொண்டு, 10,000 ரூபாய் செலவில் அறை அமைத்தோம். இதுபோன்ற தீர்த்த தலங்களில், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். வரும் நாட்களில் மேலும் பல இடங்களில், பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .