உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / ஏர் பொட்டேட்டோ - மருத்துவமும்... மகத்துவமும்...!

ஏர் பொட்டேட்டோ - மருத்துவமும்... மகத்துவமும்...!

உருளை கிழங்கு பலருக்குப் பிடித்தாலும், சிலர் வாயுத் தொல்லைக்குப் பயந்து, அதைத் தொடுவது கிடையாது. இதற்கு மாற்றாக இருப்பது தான் 'கொடி உருளை' எல்லது ஏர் பொட்டேட்டோ என்று சொல்லப்படும் காவளிக் கிழங்கு. இந்தக் கிழங்கு வகையானது மலைப்பிரதேசங்களில் விளையும் உருளைக்கு மாற்றாக சம வெளியில் காய்க்கும் கொடி வகை கிழங்காகும். இது பாரம்பரிய மிக்கதாகும். ஆனால் விவசாயிகள் பலர் தற்போது ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.ஆனால் இயற்கை விவசாயம் மற்றும் கிழங்கின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிலர் இந்த கிழங்கு வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது இந்த கிழங்கின் அருமை தெரிந்து வீட்டுத் தோட்டங்களில் பலர் வளர்த்து வருகின்றனர்.

சந்தையில் அதிகம் கிடைக்கும் அளவிற்கு இந்த ரக கிழங்குகள் பிரபலம் அடையவில்லை என்றாலும், மலைப்பிரதேசத்தில் விளையும் உருளைக் கிழங்கிற்கு ஈடான சத்துக்கள் இதில் உள்ளன. ஆண்டு முழுவதும் உணவு தேவையை தீர்க்கும் என்பதால், நமது முன்னோர்கள் இந்த கிழங்கை தொடர்ந்து பயிரிட்டு வந்துள்ளனர்.கிராமங்களைத் தாண்டி தற்போது நகரங்களிலும் மாடித் தோட்டம் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் நஞ்சு இல்லா உணவு சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு தான். இதற்காகப் பெரும்பாலானோர் புடலை, அவரை, வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், கொத்தவரை, துவரை, கடலை என அனைத்தையும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த பட்டியலில் காவளிக் கிழங்கையும் சேர்த்தால் கூடுதல் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்யும். இந்தக் கிழங்கை உணவிற்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காகத் தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரைப் பிரச்னை என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக் கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக் கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ? அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவையிலும் இருக்கும்.

காவளிக் கிழங்கு

இந்த கிழங்கை விளைவிக்கப் பெரிதாகச் செலவு என்பது கிடையாது. ஒரு கிழங்கை மட்டும் வாங்கி வந்து மண்ணில் விதைத்து விட்டால், அதிலிருந்து வரும் கொடியில் சுமார் 40முதல் 50 கிழங்குகள் வரை வரும். ஆரம்பத்தில் ஒரு கிலோ அளவிற்குக் கூட காய்க்கும் இந்த கொடியில், நாளடைவில், காய்கள் சிறுத்து ஒரு கிராம் அளவிற்கு மாறிவிடும்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த கிழங்கை விதைக்க உகந்த நேரமாகும். இந்த மாதத்தில் நிலவும் சீதோசண நிலை, கிழங்கு முளைத்துச் செழித்து வளரும். இந்த கிழங்கை தென்னை, மாமரம், வேம்பு, பூவரசு, கிளுவை,முருங்கை உள்ளிட்ட மரங்களுக்கு அடியில், மண்ணில் விதைத்தால் அவை தானாக முளைத்து கொடியாகப் படர்ந்து விடும். இந்த காவளி கிழங்கு கொடிகளில் பூக்கள் பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.

ரகங்கள்

இந்த காவளி கிழங்கில் ஆட்டுக் கொம்புக் காவளி, பெருவள்ளிக் கிழங்கு என இரண்டு ரகம் உள்ளது. ஆட்டுக் கொம்பு காவளி கிழங்கானது 100 கிராம் அளவிற்குத் தான் காய்க்கும். இக்கிழங்கில் ஒரு சிறியக் கொம்பு இருப்பதால் தான் இந்தப் பெயர். இதையும் உணவாகப் பயன்படுத்தலாம்.பெருவள்ளிக்கிழங்கு வகை கொடியாக இருந்தாலும், மற்ற கிழங்கு வகை போல் மண்ணிற்கு அடியில், காய்க்கக்கூடியது. ஒரு கிழங்கு 10 கிலோ எடை கூட வரும். இந்த கிழங்கை ஓராண்டு வரை, தோண்டாமல் விட்டுவிட்டால், 20கிலோ வரை கூட இருக்கும். இதையும் ஒரு வருடம் வரை வைத்திருந்து உருளைக் கிழங்கிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வருடம் முழுவதும் வேறு எந்தக் கிழங்குகளையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

செலவு இல்லை

காவளி கிழங்கை ஒருமுறை விதைத்தவுடன் பெரிதாகச் செலவு செய்யத் தேவையில்லை. ஏனென்றால், இந்த கொடிகளைப் பூச்சிகள் தாக்காது. மேலும் ஆடு, மாடுகள் உண்ணாது. ஆகையால் இதற்குப் பராமரிப்பு செலவு ஏதும் இருக்காது. அனைத்து வகையான மண்ணிலும் இந்த கிழங்கு செழித்து வளரும்.

பயன்கள்

காவளி கிழங்கின் அறிவியல் பெயர்'டையோஸ்கோரியா பல்பிஃபெரா ஆகும். இதை தமிழில் வெற்றிலை வள்ளிக் கிழங்கு என்றும், ஆங்கிலத்தில் ஏர் பொட்டேட்டோ என்றும், மலையாளத்தில் 'காஞ்சல்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பக் காலங்களில், 'ஸ்டீராய்டு' ஹார்மோன்கள் தயாரிப்பதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்க்குப் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.'டையோஸ்ஜெனின் என்ற மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நம்முடைய முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால் சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ