ஆகா... செடியில் மொட்டு வந்துருச்சு.. பூ விரிஞ்சாச்சு.. அடடா பூ வாடிப்போச்சு' இப்படி... பூக்களின் நிலையை குறிப்பிடுவது தற்போது வாடிக்கையாக உள்ளது. பூக்கள், தமிழில் மலர் என்றே குறிப்பிடப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மனிதர்களை போன்றே பூக்களுக்கும் அவற்றின் படிநிலையை பொறுத்து ஏழு பருவங்கள் உள்ளன. அவை..அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.
அரும்பு ஒரு செடி பூக்கும் பருவத்தில் முதலில் தோன்றுவது அரும்பு. இது பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும். மொட்டுஅரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலையை மொட்டு எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நறுமணம் உருவாகி இருக்கும். முகைமொட்டு சிறிது சிறிதாக விரியும் நிலையில் இருக்கும் நிலை முகை. அதாவது முகிழ்க்கும் நிலையில் உள்ளதால் முகை என்கிறோம். மலர்மொட்டுகள் முழுமையாக விரியும் நிலையை மலர் எனக் கூறுகிறோம். பேச்சுவழக்கில் பூ என குறிப்பிடப்படுகிறது. அலர்இதழ்கள் நன்றாக விரிந்த நிலை அலர். இந்த நிலையில் தான் பூவில் இருந்து மகரந்தம் பரவுகிறது. பேச்சு வழக்கில் பூ நல்லா விரிஞ்சிருச்சு என்கிறோம். வீமிகவும் மலர்ந்த பூக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வாடும் நிலையில் இருந்தால் வீ. அதாவது வீ என்பதற்கு வீழ்தல் என அர்த்தமாகும். செம்மல்பூ கீழே விழுந்தவுடன் வாடி வதங்கும் நிலைக்கு சென்றால் செம்மல் எனப் பெயர்.
திருக்குறளில்...
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.குறள் எண் - 1274, அதிகாரம் - குறிப்பு அறிவுறுத்தல், விளக்கம்: மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான், ஒரு பெண்ணின் புன்னகை என்ற அரும்புக்குள் அவளது காதலனைப் பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.இப்படி முகை, மொக்குள் என பூக்களின் பருவத்தை உவமையாக திருவள்ளுவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.குறள் எண் - 1227, அதிகாரம் - பொழுது கண்டு இரங்கல்விளக்கம்: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது. இதில், அரும்பு, போது எனப் பூக்களின் பருவப்பெயர்களை குறிப்பிட்டு காதலின் நிலை குறளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.முகை பூவின் பருவங்களில் ஒன்றாகும். ஆனால் மொக்குள்.. போது.. என்றால் என்ன? இதுவும் பூக்களின் பருவத்தையே குறிப்பிடுகிறது. பூக்களுக்கு தமிழில் ஏழு பருவங்கள் உள்ளன. அதேவேளையில் அவற்றின் நிலையை பொறுத்து 13 பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
அரும்பு பருவம் நனை, முகை, மொக்குள் என மூன்று பிரிவாக பெயர் குறிப்பிடப்படுகிறது. அதாவது அரும்பும் நிலைக்கு அரும்பு எனப் பெயர். நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை, முகை - தலைகாட்டிய அந்த அரும்பு முத்தாக மாறும் நிலை. மொக்குள் - பூவுக்குள் மணம் பெறக்கூடிய நிலை. இப்படி பல பிரிவுகளாக அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என 13 பெயர்களில் தனித்தனியாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் பூக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை 'பொதும்பர்' என குறிப்பிடப்படுகிறது. செடியில் இருந்து கீழே தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் 'பொம்மல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இடம், பொருள், சூழலுக்கேற்ப ஒரு பொருளைக் குறிப்பிட தமிழ் மொழியில் தான் எவ்வளவு அழகிய பெயர்கள்? தமிழ் வளர்ப்போம்...!