தங்க மகனுக்கு பிறந்த நாள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மகாபலியை ஆட்கொள்ள திருமால், குள்ள வடிவத்தில் வாமன அவதாரம் எடுத்தார். காஷ்யப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவர் அவதரித்தார். ஆவணி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரத்தின் அபிஜித் எனப்படும் முதல் பாதத்தில், துவாதசி திதியில் அவர் பிறந்தார். அப்போது நடுப்பகல் 12 மணி. சூரியன், உச்சியில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டான். இந்த நாளுக்கு விஜய துவாதசி எனப்பெயர். இவரைப் பெற அதிதி கடும் விரதம் இருந்தாள். திருமாலின் தங்கச்சிலைக்கு 12 நாள் பால் அபிஷேகம் செய்து, அதை மட்டுமே பருகி அவரே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என பிரார்த்தித்தாள். திருமாலும் அவளது கோரிக்கையை ஏற்று அவள் வயிற்றில் கருவானார். தங்கச்சிலைக்கு அபிஷேகம் செய்து பிறந்த, அந்த தங்க மகனின் பிறந்த நாளே திருவோணத் திருநாள். வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது பிறந்த நாள் வருகிறது. அன்று பகல் 12 மணிக்கு, வாமனரையும், அவரால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி மன்னரையும் மனதில் நினையுங்கள். அகங்காரம் அடங்கும். மனம் அன்பால் நிறையும்.