உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam புத்தரின் சீடர் ஆனந்தன். இவர், ஒருமுறை காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்தார். கடும் வெயில், நாக்கு வறண்டது, தாகத்தால் தவித்தார். எங்காவது, குளம், குட்டை தென்படுகிறதா என தேடி அலைந்தார். அப்போது, அவள் எதிரே, ஆபத்பாந்தவளாக ஒரு பெண் வந்தாள். அவளது இடுப்பில் குடம். எங்கோ போய், தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாள். அவளிடம்,“அம்மா! நாக்கு வறண்டு விட்டது. பேசக்கூட முடியவில்லை, கடும் தாகம்..” என்று விட்டு விட்டு பேசிய ஆனந்தன், “குடிக்க தண்ணீர் தருவாயா?” என்றார். “சுவாமி! நீங்கள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர். எனது பிறப்பையோ, இந்த சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது. நான் தண்ணீர் தந்தால், நீங்கள் குடிப்பீர்களா என்ன...” என்று அவள் பதிலளித்தாள். “அம்மா! நான் உன்னிடம் தண்ணீர் தான் கேட்டேன். ஜாதியைக் கேட்கவில்லையே. பிறப்பில் உயர்ச்சி, தாழ்ச்சி என்ற ஏதுமே கிடையாது. உனக்குள்ளும், எனக்குள்ளும் ஓடும் ரத்தத்தை இறைவன் சிவப்பாகத்தானே படைத்திருக்கிறான்,” என்றார். அந்தப்பெண்மணி மகிழ்ந்தாள். புன்னகை சிந்த, அவருக்கு தண்ணீர் கொடுத்தாள். உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன உடல் மட்டுமே கருப்பு, அவர் உதிரம் என்றும் சிவப்பு என்ற பாடல் வரிகள், இந்த சம்பவத்தில் இருந்து தான் பிறந்ததோ!