கவிஞர் வைரமுத்து ச(னாதனம்)மாதானம் | What is Karunanidhi Coin Hindi for? | Poet Vairamuthu
கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி இடம் பெற்றிருப்பது குறித்து தனது வாழ்நாள் முழுதும் இந்தியை எதிர்த்த கருணாநிதி நாணயத்தில் இந்தி எதற்கு என்று தி.மு.க.,வின் உடன் பிறப்புக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், அண்ணாதுரைக்கு நாணயம் வெளியிட்டபோதும் இதே கேள்வி எழுந்தது. கருணாநிதி முயற்சியால் அந்த நாணயம் அண்ணாதுரையின் தமிழ் கையெழுத்துடன் வெளியிடப்பட்டது. அதபோல் கருணாநிதி நுாற்றாண்டு நாணயத்தில் அவருக்கு பிடித்த தமிழ் வெல்லும் வார்த்தையுடன் அவரது கையெழுத்துடன் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். எனினும் சமூக வலைதளங்களில் நாணயம் வெளியானது குறித்து எதிர்ப்பு மற்றும் ஆதரவுடன் அடுக்கடுக்கான விமர்சனங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்து தன் பங்கிற்கு எக்ஸ் தளத்தில் சமாதான துாது விட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அதை வரவேற்போம்; வாழ்த்துவோம். காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள். அவர்களுக்கு அன்போடு ஒருசொல். இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன்செய்யப்படுகிறது; ஏற்றுக்கொள்கிறோம். கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, தமிழ் வெல்லும் என்ற கலைஞர் கையெழுத்தும் இடம் பிடித்திருப்பதால் இங்கும் அது சமன்செய்யப்பட்டுவிட்டது. வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? களிப்புறுவோம்; களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம், என பதிவிட்டுள்ளார். உங்களுக்குனா ரத்தம்; எங்களுக்குனா தக்காளி சட்னியாக? என வைரமுத்து சமாதான உரைக்கும் சமூா வலைதளங்களில் வறுத்தெடுக்கும் காரசார விவாதம் பீடு நடை போட்டு வருகிறது.