வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | rain alert | TN
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக காற்றழுத்தத்துடன் தாழ்வுப்பகுதி உருவாகவில்லை. மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி வலுவிழந்ததால், இன்று இரவுக்குள் தென்மேற்கு வங்கக்கடல் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். அதற்கு அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.