உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மெட்ரோ ரயில் திட்டம் சி.எம்.ஆர்.எல். மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல்

மெட்ரோ ரயில் திட்டம் சி.எம்.ஆர்.எல். மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல்

மெட்ரோ ரயில் திட்டம் சி.எம்.ஆர்.எல். மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் | Madura, Covai Metro Train Project | Metro MD Sidthik Inspection | Covai கோவையில் 10 ஆயிரத்து 740 கோடி, மதுரையில் 11 ஆயிரத்து 340 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் ஆயத்தப் பணி, பிப்ரவரியில் துவங்கும், என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கூறினார். இது தொடர்பாக கோவையில் அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த உள்ள திட்டங்களை அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கினர். மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனத்தினர் கூறினர். தொழில்துறையினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து இயக்குனர் சித்திக் கூறுகையில், கோவையில், அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் 34.8 கி.மீ., துாரத்துக்கு 32 நிறுத்தங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழக அரசு வாயிலாக மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கேட்ட கூடுதல் விபரங்கள் வழங்கியுள்ளோம்; மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒப்புதலை எதிர்பார்த்திருக்கிறோம். கோவையில்10 ஆயிரத்து 740 கோடியிலும், மதுரையில் 11 ஆயிரத்து 340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நகரங்களுக்கும் ஒருங்கிணைந்த திட்டமாக சமர்ப்பித்துள்ளோம். மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ., வரை சுரங்கப்பாதையாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது. கோவையில் உயர்மட்ட பாலத்தில் மெட்ரோ ரயில் செல்லும் 30 மீட்டருக்கு ஓரிடத்தில் துாண் அமையும். மெட்ரோ பணிமனை அமைக்க 40 ஏக்கர் நிலம் தேவை. இரு வழிகளிலும் வழித்தடம் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேவைப்படும். மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும். ஒரு சமயத்தில் 700 பேர் பயணிக்கலாம். திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மூன்றரை ஆண்டுகளாகும். நிலம் கையகப்படுத்துதல், பாதாள சாக்கடை, மின் புதை வடம் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளாகும். முன்கூட்டியே திட்டமிடும் வகையில் தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்தப்பணி, பிப்ரவரியில் துவக்கப்படும். நிலம் கையகப்படுத்த மார்ச்சுக்குள் நோட்டீஸ் வினியோகிக்க தயாராகி வருகிறோம்; அதற்குள் அனுமதி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார். கூட்டத்தில் கோவை கலெக்டர் கிராந்தி குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !