கடை வாடகை செலுத்தாமல் ₹பல கோடி நிலுவை | Temple property belongs to the temple | JC Action
கடை வாடகை செலுத்தாமல் ₹பல கோடி நிலுவை | Temple property belongs to the temple | JC Action | Palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலின் திருப்பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. கோயிலுக்கு முன்புறம் உள்ள கடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நான்கு கடைகள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஐந்து கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. எனினும் கடை உரிமையாளர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ஹர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டு போட சென்றனர். பல கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களிடம் இணை கமிஷனர் ஹர்ஷினி பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், இத்தனை ஆண்டு காலமாக வாடகையே இல்லாமல் கோயில் நிலத்தில் கடைகளை அமைத்து அனுபவித்து வந்துள்ளீர்கள். கடந்த 2005ம் ஆண்டே கடைகள் உள்ள நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானவை என கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும் கடைகளை யாரும் காலி செய்யவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் தலா 10 லட்சம் ரூபாய் கோயில் திருப்பணிக்கு வழங்க வேண்டும். இத்தொகையை கொடுக்க முடியவில்லை எனில் கூறி விடுங்கள் கடைகளை இப்போதே பூட்டி கொள்கிறோம். மேலும் கடைகளை கோயிலுக்கு சுவாதீனம் எழுதிக் கொடுக்க வேண்டும். தாமதிப்போரின் கடைகள் உடனுக்குடன் சீல் வைத்து கோயில் நிர்வாகம் எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து கடை உரிமையாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோயில் நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியது.