இழப்பீடு எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் | Onion prices fall | Dindigul
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, திருப்பூர், நாமக்கல், தேனி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கும் அதிகமாக சின்ன வெங்காயம் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். சின்ன வெங்காயத்தின் உற்பத்தி தற்போது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலும் அதிகளவில் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதனால் விலை தாறுமாறாக குறைந்து கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. மேலும் சின்ன வெங்காயத்தை உள்ளூர் சிறு வியாபாரிகளும் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் 100 டன் அளவிற்கு வெங்காயப்பேட்டையில் சின்ன வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் பாதுகாக்க வெங்காயப்பேட்டை குடோன்களில் தேக்கமான சின்ன வெங்காயங்களை பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவைகளை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதே நிலை நீடித்தால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை வீழ்ச்சியால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.