உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தாவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் | Ajithkumar Lockup death | Special Investication Team | Vijay plea

தாவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் | Ajithkumar Lockup death | Special Investication Team | Vijay plea

தாவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் / Ajithkumar Lockup death / Special Investication Team / Vijay plea சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வாலிபர் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக மனிதாபிமானம் அறவே அற்று சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல்துறை நடந்து கொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழகக் வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், ஐகோர்ட் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு லாக்கப் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் லாக்கப் மரணம் அடைந்திருப்பதாக ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் முதல்வர் ஸ்டாலின் உடனே வெளியிட வேண்டும். அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஐகோர்ட் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் ஐகோர்ட் மதுரை கிளையின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூரச் சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டசபைத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி