பேரையூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை | Attack on dmk executive
மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதில் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் குற்றம் சுமத்தினர். இதுகுறித்து பேரையூர் தி.மு.க. பேரூர் செயலாளர் வருசைமுகம்மது மற்றும் பேரூராட்சி துணைத் தலைவராக உள்ள அவரது மனைவி பிரியதர்ஷினியிடம் சாலையோர கறிக்கடை வியாபாரிகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது கடை நடத்த அனுமதி வாங்கி் தரும்படி கேட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவர் குருசாமி தலைமையில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் வராததால் அலுவலர்களே கூட்டத்தை நடத்தினர். கூட்டம் முடிந்த பின்பு வருசை முகம்மது பேரூராட்சி அலுவர்களிடம் கஷ்டப்படும் சாலையோர வியாபாரிகளுக்கு கறிக்கடை நடத்த அனுமதி தர வேண்டும். அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக் கொண்டார். அப்போது குருசாமி மகனும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வார்டு 7 கவுன்சிலருமான காமாட்சி ஆத்திரமடைந்து வருசை முகம்மதுவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினார். கவுன்சிலர் காமாட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணைத் தலைவர் பிரியதர்ஷினி மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரையூர் இன்ஸ்பெக்டர் மதனகலா, எஸ்.ஐ., ஜெயம் பாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.